139 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களுடன் 3பேர் கைது
கோவையில் திமுக தொண்டர் அணி துணை அமைப்பாளராக உள்ள கணபதி கதிரவன், 139 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மேலும் இருவரையும் கைது செய்த போலீசார், மூன்று ஸ்கூட்டிகளையும் பறிமுதல் செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை சரவணம்பட்டி போலீசார், கணபதி கே.கே.நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாக்கு மூட்டைகளுடன் மூன்று ஸ்கூட்டிகளில் வந்த நபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அவர்களிடம் இருந்து 139 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, திமுக தொண்டர் அணி துணை அமைப்பாளரான கணபதி பாரதி நகரைச் சேர்ந்த கதிரவன் (39), கொண்டயம்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் (46), விஜயன் (48) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று ஸ்கூட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், வழக்குப்பதிவு செய்து, குட்கா பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, யாருக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்