Our team

header ads

ரூ.2 கோடி மோசடி -போலி ஆவணங்கள் தயாரித்து விவசாய நிலத்தை ஏமாற்றி விற்பனை

 ரூ.2 கோடி மோசடி -போலி ஆவணங்கள் தயாரித்து விவசாய நிலத்தை ஏமாற்றி விற்பனை

சூலூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 47). இவர் கோவை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை செய்து வந்தார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டார். இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஒரே பகுதியில் குடியிருக்க ஆசை ஏற்பட்டது. எனவே அதற்கான நிலத்தை தேடி வந்தார்.

அப்போது அவருக்கு கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் மணி (67) என்பவர் அறிமுகம் ஆனார். அவர் பொள்ளாச்சி அருகே உள்ள சோலனூரில் அழகான இடம் உள்ளது. அதை வாங்கினால் விலையும் குறைவு என்று கூறி உள்ளார். இதையடுத்து சந்திரசேகர் அந்தப்பகுதியில் 63 சென்ட் கொண்ட 14 சைட் நிலத்தை வாங்கினார்.

ரூ.2 கோடி மோசடி 
பின்னர் கடந்த 2023-ம் ஆண்டு அந்த நிலத்தில் வீடு கட்டுவதற்காக ஆழ்துளை கிணறு அமைக்க முயற்சி செய்தார். அதை அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்து தடுத்து நிறுத்தினர். உடனே அவர்களிடம் ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள் என்று சந்திரசேகர் கேட்டார். அதற்கு அதிகாரிகள், இந்த இடம் நிலமில்லாத ஏழை-எளிய மக்களுக்கு கொடுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான விவசாய நிலம். இதை விவசாய பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீடு கட்டவோ அல்லது வேறு பயன்பாட்டுக்கோ பயன்படுத்தக்கூடாது என்று கூறினர்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர், அது தொடர்பாக விசாரணை நடத்தினார். அதில் மணி, போலி ஆவணங்கள் தயாரித்து விவசாய நிலத்தை ஏமாற்றி சந்திரசேகருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.2 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கைது செய்தனர் 
இது குறித்து பாதிக்கப்பட்ட சந்திரசேகர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மணியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

© Seithi Today – All Rights Reserved
Website Developed & Maintained by
IPD Media Networks